Jul 22, 2011


வெள்ளி, 22 ஜூலை, 2011

நோன்பு கடமை,ஈகைப் பெரு நாள்


ஈகைத் திருநாள் எந்த அடிப்படையில் கொண்டாடப்படுகிறது? இந்தத் திருநாளின் மகிழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒரு மன்னன் வெற்றிக் கொடியை நாட்டிவிட்ட மகிழ்ச்சியை இந்நாள் குறிக்கிறதா? செழிப்பைக் குறிக்கும் பருவ மாற்றத்திற்காக இந்தப் பாங்கான பெருநாளைக் கொண்டாடுகிறோமா? அல்லது எவரேனும் ஒரு பெரியவரின் பிறந்த நாளை பசுமையாக நினைவில் பதிக்கும் பெருவிழாவா?
இல்லை... இல்லை..!

இவற்றில் எந்தவொன்றும் பெருநாள் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இல்லை. அதன் அடிப்படை இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அது என்ன?
மனித இனம் இறைவனின் வழிகாட்டுதலுக்காக ஏங்கி நின்றது. அகிலத்தைப் படைத்த இறைவன், தன்னுடைய கரு ணையினால் அந்த ஒளிமிக்க வழிகாட்டுதலை வழங்கினான். ஆம்... வான்மறை குர்ஆன் அருளப்பட்டதாலேயே இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கிறோம்; இறை தியானத்தில் மூழ்கியிருக்கிறோம்.

தன் வழிகாட்டுதலை வழங்கிய இறைவன், அதைப் பின்பற்றும் நற்பேறையும் வழங்கினான். ரமலானின் பயிற்சியால் அந்த வழிகாட்டுதலைப் பேணிக் காக்கும் ஆற்றலை இன்னும் அதிகமாக அருளினான். எனவே இந்த ஈகைப் பெரு நாள் அந்த ஏக இறைவனின் பெருமையைப் பாடும் பெருநாளாகவும், நம்முடைய நன்றியைத் தெரியப்படுத்தும் திரு நாளாகவும் திகழ்கிறது.

‘பெருநாளன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்’ என்று அண்ணல் நபியவர்கள் கூறியுள்ளார்கள். ‘இன்று உண் பதற்கும் பருகுவதற்கும் உரிய நாளாகும். ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சி கொண்டாடுவதன் மூலம் இன்பத்தைப் பெறுகின்ற நாள்; மேலும் இறைவனை நினைவுகூரும் நாள்.’

பெருநாளன்று குளித்துத் தூய்மையாகி நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். புத்தாடை அணிந்து நறுமணம் பூசிக்கொள்ளுங்கள்.

அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாட பிள்ளைகளை அனுமதியுங்கள். முடிந்தால் வெளியில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக இருங்கள்.
அன்னை ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். ‘பெருநாளன்று சில சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து சில பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வருகை தந்த அபூபக்கர் அவர்கள், ‘இறைத் தூதரின் வீட்டில் பாட்டுக் கச்சேரியா?’ என்று அவர்களை அதட்டினார்கள்.

உடனே நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூபக்கரே, அவர்களைப் பாடவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மகிழ்ச்சியான பெருநாட்கள் இருக்கின்றன. இன்று நம்முடைய பெருநாள் அல்லவா?’

பெருநாளன்று அபிசீனியாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர் வீர விளையாட்டுகளை நடத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அண்ணல் நபியவர்கள் தாமும் அதைப் பார்த்து ரசித்ததுடன், தம் துணைவியார் ஆயிஷா அவர்களையும் தம் பின்னால் நிற்க வைத்து அதைக் காட்டினார்கள். அதுமட்டுல்ல, அந்த அபிசீனிய கலைஞர்களை அழைத்துப் பாராட்டவும் செய்தார்கள். (ஆதாரம்: புகாரி)

மகிழ்ச்சி கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒழுங்குமுறைகளை ஒருபோதும் மீறிவிடக் கூடாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்; ஆனால் அது எந்நிலையிலும் வரம்பு மீறாமலும் நடுநிலை தவறாமலும் இருக்க வேண்டும். ஹராமான தடுக்கப்பட்ட வழிகளில் சென்று மகிழ்ச்சி கொண்டாட நினைக்காதீர்கள்.

திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:

‘மேலும் இறைவன் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது. தம்மையே பெரிதாக நினைக்கின்ற, பெருமை பேசித் திரிகின்ற யாரையும் இறைவன் நேசிப்பதில்லை.’ (குர்ஆன் 57: 23)

பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் வழங்கிவிடுங்கள். தேவையுடையோரும் வசதியற்றோரும் பெருநாள் மகிழ்ச்சியில் பங்குகொள்ள அது பெரிதும் உதவும்.

அண்ணல் நபியவர்கள் கட்டளையிட்டார்கள். ‘பெருநாள் தர்மம் என் சமுதாயத்தினர் மீது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. இதனால் நோன்பின்போது ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாகவும், ஏழை, எளியோரின் பசியைப் போக்கவும் இது துணை செய்யும்.’ (ஆதாரம்: அபூதாவூத்)

பெருநாள் தொழுகையை ஈத்கா என்று அழைக்கப்படுகின்ற திறந்தவெளி திடலில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியதாகும். தொழுகைக்குப் பிறகு ‘துஆ’ எனும் இறைவேட்டல் மிக உருக்கமாக நடைபெறும்.

நமக்காக, நமது குடும்பத்திற்காக, நமது ஊருக்காக, நம் நாட்டின் நலனுக்காக, உலக அமைதிக்காக, மறுமை வெற்றிக்காக என்று மிக உருக்கமாகப் பிரார்த்தனை செய்யப்படும். அதற்குப் பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பெருநாள் மகிழ்ச்சியையும் வாழ்த்து களையும் பரிமாறிக் கொள்வார்கள்.
எல்லோருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

ரமலான் தகவல்கள்

அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதம் ரமலான். இந்த மாதத்தில்தான் முஸ்லிம்கள் அனைவரும் புனித நோன்பை நிறைவேற்றுகிறார்கள்.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டுதான் நோன்பு கடமையாக்கப்பட்டது.

நபிகள் நாயகம் அவர்களுக்கு முன்னர் வருகை தந்த இறை தூதர்களின் சமுதாயங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது.

வயது வந்த அனைவர் மீதும் நோன்பு கடமையாகும். நோயாளிகளுக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கும் விலக்கு உண்டு.

புனித ரமலான் மாதத்தின் உயர்தனிச் சிறப்பு என்னவெனில், இந்த மாதத்தின் ஓர் இரவில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட அந்தப் புனித இரவு ‘லைலத்துல் கத்ர்’ (மாட்சிமை மிக்க இரவு) என்று அழைக்கப்படுகிறது.

ஹிரா எனும் குகையில் நபிகள் நாயகம் அவர்கள் தனிமையில் இறை தியானத்தில் மூழ்கியிருந்தபோது, அவர் முன் வானவர் ஜிப்ரீல் தோன்றி குர்ஆன் வேதத்தை அருளிச் செய்தார்.

அறிவுத் தேடலுக்கும், மெய்ஞானத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையில் திருக்குர்ஆனின் முதல் வசனம் ‘ஓதுவீராக...’ என்றே அருளப்பட்டது.

இந்த மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத்தொழுகை நடைபெறும். அதில் குர்ஆன் முழு மையாக ஓதி முடிக்கப்படும்.

திருக்குர்ஆனில் முப்பது பாகங்களும், 114 அத்தியாயங்களும், 6666 வசனங்களும் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகம் என்று ஓதப்படும்.

இந்த மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்குப் பல மடங்கு நற்கூலி வழங்கப்படும் என்று நபிகளார் அறிவித்துள்ளார்.

தூய ரமலானில் வசதி படைத்தவர்கள் ஜகாத் எனும் கட்டாய தர்மத்தை எளியோர்க்கு வழங்கு கிறார்கள். ஒருவருடைய வருமானத்தில் செலவுகள் எல்லாம் போக ஒரு குறிப்பிட்ட தொகை மீதம் இருக்குமாயின், அந்தத் தொகையில் இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும்.

வசதி இருந்தும் ஜகாத் கொடுக்காதவர்களுக்கு மறுமையில் கடும் தண்டனை காத்தி ருக்கிறது என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

ரமலானின் கடைசி பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ எனும் உயர் ஆன்மிக வழிபாடு பேணப்படுகிறது.

வீடு, தொழில், மனைவி, மக்கள் என உலகியல் காரியங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி, பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே முழுமையாகத் தங்கி இறைவனை வழிபடுவதற்குப் பெயர்தான் இஃதிகாப்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாக ‘ஃபித்ரா’ எனும் பெருநாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிடல் வேண்டும்.

Jul 11, 2011

வம்பு பேசுவது நியாயமா?

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?


மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"


"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்


வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு.

ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.

திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)

''திருமணம் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என நபி (ஸல்) அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.

இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

தான் விரும்பியபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.

திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.

கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள். மார்க்கத்தின் அடிப்படையே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?

எனவே மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.

''இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்

''அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி), நூல்: நஸயீ.

''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது உமர் (ரலி) அவர்கள், ''நான் உங்கள் கவலையை நீக்குகிறேன்'' என்று கூறி விட்டு (நபியவர்களிடம்) சென்று ''அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹு அக்பர்'' என்று கூறினார்கள். பின்னர் ''மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு ''கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.


மேற்கூறிய நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன?

சிறு சிறு உதவிகளைச் செய்தல்
கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரி.

''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ''தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத்.


அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

ஊட்டி விடுதல்
சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.

''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதவிடாய் நேரத்தில்...
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்தனர். பொதுவாக இந்த நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்'' என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபி (ஸல்) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, அவர்கள் சமைத்ததைச் சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவிவிடுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதவிடாய் என்று கூறி மற்றவர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும் பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் வாய் வைத்து குடித்துள்ளார்கள். இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடித்த அதே இடத்தில் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றார்கள்.

இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையோடு இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம் கணவன் இது போன்று நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

இல்லற வாழ்க்கை இனிக்க மார்க்கம் தடை செய்யாத விஷயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதைச் செயல் படுத்த வேண்டும்.

இவ்வாறு செயல் படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மாரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாகக் கூறி அதன்படி நடக்கவேண்டும்.

இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும்; சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ''உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ''அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை.

மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.

இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை; தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

இதைப் போன்று மனைவியின் தோழிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு அனுமதி கேட்டால் கணவன்மார்கள் அனுமதி அளிக்க வேண்டும். பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கும் கணவன்மார்கள் நபிகளாரின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.

விளையாடுதல்

திருமணம் முடிப்பவர்கள் கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருக்க, தாங்கள் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் சிரித்து விளையாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆர்வப் படுத்தப்பட்டுள்ளது.

''கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே! நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி.

கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் விளையாடு வதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போது நான் இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன். எனக்கு சதை போட்டு உடல் கனத்திருக்க வில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள்.

எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்டேன். (ஓட்டப் பந்தயம் விஷயத்தையும்) நான் மறந்து விட்டேன். இன்னொரு முறை அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள்.

பின்னர் என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். நான் அவர்களுடன் ஓடினேன். (இறுதியில்) என்னை நபிகளார் முந்தி விட்டார்கள். சிரித்துக் கொண்டு ''அதற்கு இது சரியாகி விட்டது'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.


எந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விவரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபிகளாரின் வயது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கலந்து கொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் போகும் போது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக இருக்க வேண்டும்.

நபிகளாரின் வயது (குறைந்த பட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டப் பந்தயம் வைத்து தோற்றுப் போய், பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது, மனைவியிடம் கணவன் வயது வரம்பின்றி இதுபோன்று விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.

இவ்வாறு நடப்பதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.