Dec 21, 2011

அண்ணலாரின் அழகிய அணுகுமுறை


அல்லாஹ் குர்ஆனில் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பான அணுகுமுறைக்கு அங்கீகாரம் சொல்லும் வகையில் கூறுகிறான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நிங்கள் கடுகடுப்பானவராகவும், கடினஉள்ளம் கொண்ட வராகவும் இருந்தீர்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.
அல்குர்ஆன். 3:159
குர்ஆ;னின் விளக்கமாகவே நடந்து காட்டியகோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசத்தின் ஒளியில் அன்பின் இலக்கணமாக வாழ்ந்தார்கள். அன்னாரின் சொல்லும் செயலும் சுற்றியுள்ளவர்களை பற்றி இழுத்து அன்னாரை பாசம் கொள்ளச் செய்தான்'
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், அரபி அரபியில்லாதவன் என்ற எந்த பாகுபாடுமற்ற பரிசுத்தமான அன்னாரின் சமத்துவ நடவடிக்கைகள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் கட்டிப்போட்டு ஒரு குடும்பம் என்ற உள்ளார்ந்த அன்பை ஊட்டி செம்மைப்படுத்தியது.
எவர் நம்மமிலுள்ள சிறுபிள்ளைகளிடம் அன்பு கட்டவில்லையோ, பெரியவர்களுடன மறியாதையோடு நடந்து கொள்ளவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல, என்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு வரிச்சொல் சிறியவர் பெரியவர் அனைவருக்கும் சிறந்த நடைமுறையை கற்றுத்தரும் அழகிய போதம் எனலாம். இந்த போதம் நபியின் உண்மையான வாழ்வின் பிரதிபளிப்புதான் என்றால் அது மிகையல்ல.
மாபெரும் தலைமைக்கு சொந்தக்காரராகிய நபியவர்கள் மக்களிடம் பழகும்போது சாதாரண தோழனைப்போல சகஜமாக நடந்து கொண்டது தலைவர்கலுக்கெல்லாம் சிறந்த முன்மாதியாகும்.
அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட சிறந்த ஒழுக்கங்களைக் கொண்டவர்கள் எவருமில்லை. அவர்களுடைய தோழர்களோ, அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களோ அழைத்தால் அவர்கள் உடனே பதில் தந்த உதவி செய்தார்கள்.
அனஸ் (ரளி) அவர்கள் அருளினார்கள்: யாராவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காதுகளில் (ரகசியம்) பேசினால் பேசுபவர் தனது வாயை எடுக்கும்வரை தமது காதுகளைத் திருப்பமாட்டார்கள். யாராவது அவர்களது கரங்களைப் பற்றினால், அவர் நபியின் கரத்தை விட்டு விட்டு விலக்கி கொள்ளாதவரை நபியவர்கள் தனது கரத்தை விலக்கிக் கொள்ளமாட்டார்கள். யாரையாவது பார்த்தால் முதன்முதலாக முந்திக்கொண்டு ஸலாம் முகமன் கூறுவார்கள். தமது தோழர்களைக் கண்டால் முதன்முதலாக முந்திக் கொண்டு அவர்களது கரங்களைப் பற்றுவார்கள் நபியாகத்தான் இருப்பார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யார் சந்திக்க வந்தாலும் அவர்கள் தவறாமல் கண்ணியப்படுத்துவார்கள். தங்களுடைய மேலாடையை விரித்து அமரச் சொல்வார்கள் தங்களுடைய முதுகுக்குப்பின்னால் வைத்துக்கொள்ளும் மெத்தையை தன்னை பார்க்க வருபவர்களின் முதுகுக்கு வைத்துக் கொடுப்பார்கள். வருபவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரித்த துணியில் அமர்ந்திட தயங்குவார்களானால் அவரை வற்புறுத்தி இருக்கச் செய்வார்கள்.
எதிரிகளாகவே இருந்தாலும் ஏந்தல் நபியின் வார்த்தைகள் இனிமையும் இங்கிதமும் நிறைந்தே வெளிவரும் இறுக்கமோ, இடைஞ்சலோ இல்லாத இறுக்கமான உறவுக்குரியவராகவே அவர்களைக் கருதத்தோன்றும் வகையில் நடந்து கொள்வார்கள்.
ஒரு முறை ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க வந்திருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு உள்ளே வர அனுமதியளித்து விட்டு அவரைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் அந்த மனிதரைப்பற்றி இவர் அவரது கூட்டத்தினரில் மிகவும் தீயவர் என்பனபோன்ற வார்த்தைகளைக் கூறினாhல்.
சற்று நேரத்தில் அந்த மனிதர் உள்ளே வந்தபோது நபியவர்கள் அவரிடம் மிகவும் மறியாதையாக பாய் எடுத்துப்போட்டு அமரவைத்து உபசரிப்போடு நடந்து கொண்டார்கள்.
அந்த மனிதர் அங்கிருந்து சென்றபிறகு அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'யா ரஸுலல்லாஹ்! வந்து சென்ற மனிதரைப்பற்றி தீயவர் என்று பேசிவிட்டு அவர் வந்தவுடன் அவரிடம் மறியாதையோடு நடந்து கொண்டீர்களே? காரணம் என்ன?'' என்று வினவியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். ஆயிஷா! நான் யாரிடத்திலாவது கடுமையாக நடந்து கொண்டதைப் பார்த்ததுண்டா?
அன்னை ஆயி்ஷா[ரளி] அவர்களது கேள்விக்கு நபியவர்களின் இந்த பதில் அன்னாரின் இயல்பான பழக்கத்தைக் காட்டுகிறது இது ஆரம்பத்தில் அல்லாஹ் கூறிய வசனத்தின் கருத்தை ஒத்திருக்கிறது.
ஒருமுறை நபியவர்களிடம் ஒருவர் வந்து உதவி கேட்டார். கொஞ்சம் உதவி செய்து விட்டு போதுமா? என்று கேட்க வந்தவர் எனக்கு போதாது என்று ஒருமாதி்ரியாகக்கூற நபித்தோழர்கள்அந்தமனிதரைஅடிக்கபாய்ந்தனர்,நபி[ஸல்]அவர்கள் அவரை அனுப்பி விட்டு அவரைத் தனியாகச்சென்று அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு திரும்பினார்கள்.
அடுத்த நாள் வந்த அந்த மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களை தாங்கள் எனக்கு போதுமான அளவு உதவிவிட்டீர்கள் என்று மனதார புகழ்ந்தபோது நபித்தோழர்கள் மகிழ்ந்தனர்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் உங்களுக்கு மத்தியில் எனது உதாரணம்: ஒருவர் ஒரு பெண் ஒட்டகையை வளர்த்தார் ஒருமுறை அது கட்டவிழ்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தபோது
அதைதப்பிடித்துக் கொடுப்பதற்காக அருகிலிருந்த அனைவரும் துரத்தினர். அந்த ஒட்டகையோ இன்னும் வேகமாக வெருண்டு ஓட ஆரம்பித்தது இதனைக்கண்ட அந்த ஒட்டகையின் சொந்தக்காரர் அந்தமக்களைப்பார்த்து 'எனது ஒட்டகையை எப்படி வழிக்கொண்டு வருவது என்பத எனக்குத் தெரியும் என்று கூறியவராக சில புற்களைக் கையில் ஏந்தியவராக அந்த ஒட்டகையின் அருகில் காட்டியபோது அந்த ஒட்டகை பணிந்த நிலையில் வந்தது, உடனே அவர் அதைப்பிடித்துக்கொண்டார்.
இந்த உதாரணத்தின் மூலம் இந்த மக்கள் சமுதாயத்தை  அணுவது, அரவணைப்பது, எவ்வாறு என்ற அழகான அணுகுமுறையை அண்ணலார் பெற்றிருந்தார்கள் என்பது விளங்கும்.

Dec 11, 2011

அன்புச் செல்வங்களுக்கு...பகுதி-1

இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்
தொகுப்பு: அபுபிலால்
அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.
எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?

என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.

3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.

4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?

மலக்குகள்

5 . உனது நபியின் பெயர் என்ன?

எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.

6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?

எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.

7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?

'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.

8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?

எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.

9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?

நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.

10 . உன் வேதத்தின் பெயர் என்ன?

என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.

11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?

திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)

12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?

ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.

13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?

நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.

14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்

15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?

மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.

16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?

அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)

17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?

தொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.

18. நோன்பு என்றால் என்ன?

இறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.

19 . ஜகாத் என்றால் என்ன?

ஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)

20 . ஹஜ்; என்றால் என்ன?

செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.
21 . ஈமான் என்றால் என்ன?

அல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.

22 . முஸ்லிம் என்றால் யார்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.

23. மலக்குமார்கள் என்றால் யார்?

அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.

24 . நபிமார்கள் என்பவர் யார்?

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.

25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்?

ஆதம் நபி (அலை)

26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ? ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன?

ஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).

27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை? ஆவை யாவை?

திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).

28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது?

தவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும் 

ஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்

இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும் 

புர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.

29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது?

இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.

30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன?

குர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.

31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை?

குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.

32. அல்லாஹ்வைப் பற்றி கூறு?

அல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.

33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக?

நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர்மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.

34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்?

எந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.

35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்?

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.

36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது?

அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா?

எப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.

38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்?

அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா?

நாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.

40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன?

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.
41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன?

இந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.

42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன?

இதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.

43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது?

ஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.

44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.

'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)

45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?

1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை?

1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது

2. மழை பொழியும் நேரம் பற்றியது

3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து

4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து

5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது

(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)

47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்? 

நம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.

48. நரகம் என்றால் என்ன?

மிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.

49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் ?

இறைவனிடமிருந்து தண்டனை.

50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?

இறைவனிடமிருந்து சுவர்க்கம் கிடைக்கும்.

51. சுவர்க்கம் என்றால் என்ன?

மிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.

52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா?

இல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.

53. ஹலால் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.

54. ஹராம் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.

55. கொலையைவிட கொடிய செயல் எது?

பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)

56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'.

57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?

நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)

58. மாற்று மதத்தவரின் உரிமைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் மதிப்பு தரப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹதீஸ் சான்று கூறு?

எவன் ஒருவன் முஸ்லிமல்லாத ஒருவனை அநியாயமாக கொலை செய்துவிடுகிறானோ அவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவுள்ளார்கள்.

(நூல்கள் புகாரி, அபு தாவூத்)

மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)
----------------
  தொடர்புடைய பதிவுகள் :-

தொடரும் இன்ஷா அல்லாஹ்.....
 








 


 


 


 


 



Dec 6, 2011

பெண்களின் ஏழு பருவங்கள்

  • பேதை 1 முதல் 8 வயது வரை
  • பெதும்பை 9 முதல் 10 வயது வரை
  • மங்கை 11 முதல் 14 வயது வரை
  • மடந்தை 15 முதல் 18 வயது வரை
  • அரிவை 19 முதல் 24 வயது வரை
  • தெரிவை 25 முதல் 29 வயது வரை
  • பேரிளம் பெண் 30 வயது முதல்